Friday, October 10, 2008

‘புரிதலின் அவலம்’ றஞ்சனி கவிதை வெளியில் அலையும் சொற்கள்

--------------------------தீபச்செல்வன்


--------------------------------------------------------------------------
றஞ்சனியின் கவிதை சிலவற்றிற்க்கு வார்ப்பு இணையதளத்தில் பின்னூட்டம் எழுதியிருந்தேன். முதல் வாசினடிப்படையில் மதிப்பிடப்பட்ட அந்தக்கருத்துக்களை நானே மீறுகிற வகையில் அவரின் புரிதலின் அவலம் என்ற கவிதை என்னை பாதிக்கிறது. பிழைத்துப்போன புரிதலிலிருந்து வெளியில் அலைகின்ற சொற்களை சில அடிகளில் இணைக்கின்ற பாங்கை றஞ்சனியிடம் காணமுடிகிறது. அத்தன்மை ஒருங்கினைந்து இந்தக் கவிதையில் துண்டாடப்பட்ட ஒரு இரவில் அல்லது ஒரு பகலில் கிடந்து உருள்கிற குருதியின் சொற்கள் கிளம்புகின்றன.

றஞ்சனியின் அடையாளத்தை 'புரிதலின் அவலம்' என்ற ஒரு கவிதையின் ஊடாக காணமுடிகிறது. அது நீண்ட வாழ்வின் ஒரு நாளை பிழைத்துப்போன நிமிடத்தின் ஒரு துளியை பேசுகிறது. மாறிமாறி மாறிவிடுகிற இணைவுக்குள்ளும் பிரிவுக்குள்ளும் அறுந்து வெளியில் வந்துவிடுகிற புழுவாக துடிப்பையும் காற்றையும் பிரதிபலிக்கிறது.

"முத்தங்களாகி கலியில் மயங்கி
இறுக அணைத்து வியர்வையில் ஒட்டி
கரைந்துபோகும் அடுத்த நிமிடமே
நீ ஆணாகி விடுகிறாய்."
இது வெளியின் சொற்களை காண்பிக்கிறது. கலவியில் குறையில்விட்டு எழுந்து செல்கையில் இருட்டில் படுக்கையில் கிடக்கிற தெரியாத முகத்தையும் கேடக்;காத சொற்களையும் எழுதுகிறது. குறையில் விட்டுச் செல்கிற அந்தப்படுக்கையிலிருந்து இருட்டிலிருந்து மூடுண்ட புல்பற்றையிலிருந்து எழுந்து செல்கிறதை எழுதுகிறது.

"நான் காணவேண்டிய நீ முழுமையாகக் காணாது
ஆணாக விஸ்வரூபம் எடுக்கிறாய்"
பிழைத்துப்போன நிமிடத்தை வெறுக்கிற உணர்வை எழுதியது இந்த அடிகள் கவிதையை வெளியில் இடுகிறது. குறையாய் கிடைக்கையில் ஆண் உருவம் வெளி எழும்புகிற அதன் அலத்தை எழுதுகிற போது விட்டெழும்புகிற வேகமும் வெறுப்பையும் சட்டென வெளியே சொல்லுகிறது.

"ஒரு நாள் மறந்துவிடலாம்
இரு நாள் மன்னித்து விடலாம்ஒவ்வொரு நாளும்
பைத்தியமாகிறது உறவு"
பகலின் இடைவெளியில் முகமிழந்து துடிக்கிற மொழியினையும் மறைந்துகிடக்கிற குறியின் முகத்தையும் சரிசெய்ய முடியாத கலவியையும் கேள்விக்குள்ளாக்கின்றன. பைத்தியமான அல்லது குழப்பமான பொழுதுகளை நிறைத்துவிடுகிற உறவாய் நாள் அமைந்துவிடுகிறதை வெளிப்படுத்துகிறது.

"நீ எழுதுகிறாய் பேசுகிறாய்
இதில் பெண்ணுரிமை வேறு
எதையுமே நீ புரிந்ததில்லை
எப்படி முடிகிறது உங்களால்"
வீட்டுக்குளிலிருந்து வெளியில் வந்து கேள்விகளாய் முகத்தில் அறைகின்றன இந்தச் சொற்கள். எதையுமே புரியாத நீ என்பதில் புரிந்துகொள்ளபடாது தள்ளிப்போன நிலையையும் உடைந்த முகத்தையும் கொண்டிருக்கிறது. எப்படி முடிகிறது என்பதில் தனி ஒரு கேள்வி பெரிதாய் விரிந்து எழுவதை காணமுடிகிறது.

"என்னால் முடியவில்லை விட்டுவிடு
எல்லாத்தையுமே"
கவிதையின் கடைசியில் இருக்கின்ற இந்த வரிகளுடன் இரவும் படுக்கையும் கலவியும் பகல்களும் முடிந்துவிடுகின்றன. அதன் கடைசி அடியில் இருந்து வெளி புறப்படுகின்றது அல்லது உருவாகிறது. சொற்கள் அலையத் தொடங்குகின்றன. காற்றை அறிகிற ஒளியை அறிகிற கடைசி அடிக்குப்பிறகான வெளியில் புரிந்து கொள்ள முடியாத எப்போதுமே புரிந்து கொள்ள முடியாதுபோன உணர்வு தொடர்ந்து துடித்துக்கnhண்டிருக்கிறது.


கடைசி அடியின் பிறகான வெளியில் துடிக்கின்ற வெளியில் புரிவதற்கன அவலமும் வெளியும் இருக்கிறது. இந்தப்போதாமையினையும் இடைவெளியினையும் புரிதலின் அவலத்தில் றஞ்சனி நிரப்பியுள்ளார். இந்தக்குறைநிலையினை வெளியில் வந்துபேசுவது றஞ்சனியின் மொழியின் சிறப்பாகவும் அடையாளமாகவும் படுகிறது. புரிதலின் குழப்பம் பற்றி இவர் நிறையக் கவிதைகள் எழுதியபோதும் எப்பொழுதும் கொதித்துக்கொண்டிருக்கும் நிமிடத்துளியையும் குருதியையும் இரவையும் இந்தக் கவிதை சிறப்பாக போர்வையிலிருந்து வெளியிலெடுத்துக் காட்டுகிறது. காத்திருத்தலை உடைத்து வெளியில் அலையும் எண்ணற்ற சொற்களும் இருக்கின்றன. உண்மையில் நினைவுக்கு வரும்பொழுதெல்hலாம் இந்தக் கவிதை முகத்தில் அறைந்து கொண்டிருக்கிறது.
-----------------------------------------------------------------------
('பெயல் மணக்கும் பொழுதுகள்' என்ற ஈழப்பெண்கவிஞர்களின் கவிதைத்தொகுதியில் றஞ்சனியின் புரிதலின் அவலம் கவிதை இடம்பெறுகிறது)

No comments: