Sunday, August 23, 2009

காலத்தின் ஓளியை அவாவுகிற கவிதைகளின் இதழ்- நடுகை


ஆறு தாள்களில் பன்னிரண்டு பக்கங்களில் இருள் கொண்ட காலத்தின் வலியைப் பேசுகிற கவிதைகளுடன் ‘நடுகை’ என்ற மாத இதழ் வந்திருக்கிறது. ‘அம்பலம்’ குழுமத்தின் மற்றொரு வெளியீடாக வந்திருக்கும் இந்த இதழ் பள்ளி மாணவர்கள் பலரது கவிதைகளுடன் வந்திருக்கிறது. அரசியல் பிரகடனங்கள் எதுவுமற்று இயல்பான உணர்வெழுச்சியின் சொற்களை கொண்டு வந்திருக்கிறது. மூன்றாவது இதழில் பள்ளி மாணவர்கள் ஆறு பேர் கவிதைகளை எழுதியிருக்கிறார்கள். இந்த வளருகிற எழுத்துக்கள் இயல்பு கொண்டு சூழிவு நெளிவற்று இருக்கிறது.

இதழ் 01

இருள் படிந்த காலத்தையும் கனக்கிற துயர்களையும் அநேகம் கவிதைகள் புலப்படுத்துகின்றன. நடுகை இரண்டில் வந்த கவிதைகளில் சித்தாந்தனின் ‘வெறுமையின் மீது வலி’ நெய்யும் பாடல் என்ற கவிதை வெறுமையான காலம் பற்றி சித்திரமாக இருக்கிறது. சொற்களின் நெருக்கடிகளது காலத்தை அது பேசுகிறது.

“நிரவி அடைக்கவியலா வெற்றிடத்தை

சோற்களால் துயரெழுப்பிச் சூழ்கின்ற

எண்ணற்ற குரல்களையும்

கௌவித்தின்கின்றது காத்திருந்த மிருகம்”

முற்றுகையின் நெருக்குவாரத்தையும் சிதைந்த நகரத்தின் ஏக்கத்தையும் ஆபத்து நிலைகளையும் பேசி வருகிறது சித்தாந்தன் கவிதைகள். இது காலம் பற்றிய ஏக்கமாகவும் அது பற்றி உணர்ந்த ஆபத்து நிலையாகவும் வருகிறது.

அடுத்து சி.ரமேஷ் எழுதிய ‘ஈழத்து நவீன கவிதை இலக்கிய முன்னோடி தா.இராமலிங்கம்’ என்ற கட்டுரையை எழுதியிருக்கிறார். வாழ்வின் முற்ககால நெருக்கடி அனுபவநிலைகளை வெளிப்படுத்திய தா.இராமலிங்கம் சொற்களை கையாளுகிற முறையில் தனித்துவமானவர். அவருடைய சொற்கள் வாழ்நிலையுடனும் மண் நிறத்துடனும் மணந்து கொண்டிருப்பவை. தா.இராமலிங்கத்தின் மரணம் நெருக்கடிகளின் மத்தியில் நிகழ்ந்திருந்தது. அவரது இடம் குறித்தும் சொற்களின் இழப்புக் குறித்தும் கவனம் கொள்ளப்படாத நிலையில் சி.ரமேஷ் எழுதிய பதிவு முக்கியம் பெறுகிறது. தூ.இராமலிங்கத்தின் கவிதைகள் பற்றிய வாசிப்பாகவும் தகவல்களின் திரட்hகவும் இந்தக் கட்டுரை இடம்பெறுகிறது.

அடுத்து ஆபிரிக்க கவிஞர் பிலிப் ஜூவாவோவின் ‘உலோகக் கழிவு’ என்ற கவிதையும் பிலிப் ஜூவாவோ பற்றிய குறிப்பும் ‘ஒரு கவிஞன் ஒரு கவிதை’ என்று இடம்பெறுகிறது. மானிப்பாய் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த யோ.கௌதமி என்ற உயர்தர வகுப்பு மாணவியின் ‘விண்ணப்பம்’ என்ற கவிதை இடம்பெறுகிறது.

“தொல்லைகள் துரத்தும்

துயரக்கதை

முடிவே இல்லாமல்

முடிச்சிடும் பிரச்சினைகள்

பலவீனம் மேலெழ

அழுகை பலமாகிறது”

முடிவற்ற நெருக்கடி பற்றி ஒரளவு நேர்த்தியுடன் பேசுகிறது இந்தக் கவிதை. இவற்றுடன் ‘காமாணற்போன வாசம்’ தாட்சாயணி கவிதை, ‘விம்பத்துடன் வாழ்தல்’ தபின் கவிதை என்பனவும் இடம்பெறுகிறது. ந.சத்தியபாலனின் ‘விருந்தயரும் காங்கள்’ என்ற கவிதை புண்ணை கிளறும் வலிகளை தவிப்பு நிலையில் வெளிப்படுத்துகிறது. சலனியின் ‘காத்திருப்பின் வலி’ காத்திருத்தலின் மனநிலை குறித்து பேசுகிறது.

கவிதை உருவாக்கும் முறை அமிலோவல் கட்டுரையை தமிழில் பிரம்மராஜன் மொழிபெயர்த்திருக்கிறார். சீனாவின் முதலாவது கவிதைத் தொகுதி நர்த்தகன் எழுதிய குறிப்பும் இடம்பெறுகிறது. ஒரு கனவின் துயரிசை என்ற கவிதையை ஜி.எம்.ரி.ருத்ரா எழுதியிருக்கிறார்.

அடுத்து கோகுலராகவனின் ‘இழத்தலின் பாடல்’ கவிதை இடம்பெறுகிறது. கனவின் இழப்புப் பற்றிய பெருந் தவிப்புடன் சமுத்திரத்தில் தாழ்க்கப்படுகிற சொற்களாக இந்தக்கவிதையின் சொற்கள் இடம்பெறுகிறது. கவிதையின் இடையில் வருகிற சொற்களைத் தவிர பொழுதின் இழப்புப் பற்றிய துயர்ச் சித்திரமாயிருக்கிறது.

“ஆயிரம் கனவுகளை

தெருவில் எறிந்து பின்

ஒரு கணத்தில்

சிறகுகளை வெட்டி வீசிவிட்டு

உலாப்போக நினைக்கிறன்றது

சிறுபறவை

என் கனவுகள் முழுச் சாக்கில்

கட்டப்பட்டு நதியில்

வீசப்பட்டன”

அடுத்து ‘ஜெபஙகளின் மீதெழுகிற அழுகை’ என்ற தீபச்செல்வன் கவிதை இடம்பெறுகிறது.

இதழ் 02

நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் படருகிற துயரை பிழைத்த உலகத்தை பேசுகிற ‘வாயடைத்துப் போனோம்’ கவிதை இ.முருகையனின் இழப்பினை முன்னிட்டு இரண்டாவது இதழின் முகப்பில் வெளியாகியுள்ளது.

“ஒன்றும் எமக்குச் சரியாய் விளங்கவில்லை

திக் கென்ற மோதல்

திடுக்கிட்டுப் போனோம்

வராதாம் ஒரு சொல்லும்”

என்று நெருக்கடியின் கையறு நிலையைப் புலப்படுத்துகிறது இந்தக்கவிதை. ர்pஷான்ஷெரிப்பின் ‘சிதைந்த நாட்களோடு ஓய்தல்’ கவிதை மரணத் தருவாயிலிருந்து மீண்ட நஞ்சு படிந்த நினைவுகளை மீட்டுகிறது. அடுத்து அம்மனின் ‘மிதப்பு’ கவிதை இடம்பெறுகிறது. புத்தகங்களோடு ஒரு சில பொழுது என்ற கவிதையை மல்லாகம் மகா வித்தியாலய உயர்தர மாணவி யமுனா செல்வராஜா எழுதியிருக்கிறார். ஊரெழு கணேச வித்தியாலயத்தில் 11ஆம் தரத்தில் கறகும் மாணவி நீ.சுகன்யாவின் சுதந்திரம் கவிதையும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் 11ஆம் தரத்தில் கற்கும் மாணவி க.சாதனாவின் பூக்க மறுக்கின்றது ஒரு பூஞ்செடி என்ற கவிதையும் இடம்பெறுகிறது. இதில் சாதனாவின் சொற்கள் நம்பிக்கையை தருகின்றன.

“கறை படிந்த ஒற்றயடிப் பாதையில்

மீண்டும் ஓர் பயணம்

நசுக்கப்பட்டு

வதைக்கப்பட்ட பெண்கைக்கு

உதிர்ந்த இதழ்கள்

வண்டின் வரகவ்காக ஏங்குதல்போல்

உடைந்த என் மனமும்

ஏதோ ஒன்றைத் தேடுகின்றது”

என்று அவர் உடைந்த மனதின் பெருக்கத்தை எழுதுகிறார். பிரிவு என்ற கவிதையை வடமராச்சி மத்திய மகளிர் கல்லூரி உயர்தர மாணவி இ.திசாந்தினி எழுதியிருக்கிறார். அடுத்து உடுவில் மகளிர் கல்லூரி உயர்தர மாணவி எழுதிய பாசத்தைத்தேடல் என்ற கவிதையும் இடம்பெறுகிறது. மரணம் முடிவு கொள்ளுகிற வாழ்வை மரணமற்ற இயற்கையிடம் ஒப்பிட்டு பொருளைத் தொடுகிறது பண்ணாகம் மெய் கண்டான் மகாவித்தியாலய உயர்தர மாணவி இ.யசோதாவின் கவிதை.

“நித்தமும் உலகில்

பூக்கள் மலரும்

அலையும் காற்றும்

ஆட்டம் போடும்

புவியில் நிலைப்பவை இவையே”

என்று தொடருகிறது அந்தக் கவிதை. இங்கு பள்ளி மாணவர்களின் கவிதைகளில் சில கவிதைகள் ஆரம்ப நிலைகளையும் முளைவிடு பருவத்தையும் கொண்டிருக்கிறது. பின்பக்கம் கவிழ்ந்தும் மறைந்திருக்கிற பிம்பங்களையும் எந்தக் கவிதைகளும் கொண்டிருக்காமல் மிகவும் இயல்பாக இருக்கின்றன. கோட்பாட்டு நிலை பெறாத யதார்த்த்தின் வெளி;பாடாக இளைவர்களின் கவிதைகள் வருகிறது.

திருமறைக்கலா மன்னறத்தினரால் ஒரு முறை கவிதைப் போட்டி நடத்தப்பட்டபோது அதனை வாசிப்புச் செய்ய நேர்ந்தது. அங்கு என்பதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கவிதைகளை எழுதியிருந்தார்கள். எல்லோருடைய கவிதைகளும் யாழ்ப்பாணத்தினதும் ஈழ மக்களினதும் மனங்களின் நெருக்கடிகளையும் துயர்களையும் வெகு இயல்பாக வெளிப்படுத்தியிருந்தன. எனவே நெருக்கடியான காலத்தில் சிதைவுகளுக்குள்ளாகிற நிலத்தில் வருகிற குழந்தைகளின் சொற்கள் மனம்பொருந்திய உணர்வுப்பெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. அப்படி அவர்கள் எழுதுவதற்கு நடுகை வாய்பபாக இருக்கிறது.

கிண்ணியா பாயிஸா அலியின் தசைரோபோ என்ற கவிதையுடன் மருதம் கேதிஸின் ‘தவறியிருக்கின்றது ஒரு துளி நெருப்பு’ கவிதையும் இடம்பெறுகிறது.

“உள்ளிருந்து எல்லா அதியற்புதங்களையும்

நிகழ்த்திய ஒரு துளி நெருப்பு

தவறியிருக்கிறது”

என்ற சொற்களுடன் தொடங்கும் கவிதை மனதின் பெரு உணர்வெழுச்சியை வெளிப்படுத்துகிறது. கவிதை உருவாக்கம் முறை’ கட்டுரையின் தொடர்ச்சியுடன் கவிஞர் இ.முருகையன் பற்றிய சி.ரமேஷின் ‘காலத்தை வென்ற கவிஞர்க்குக் கவிஞன் இ.முருகையன்’ என்ற கட்டுரையும் ‘சித்தாந்த சார்பொன்றின் ஆத்ம கீதம்’ என்ற த.அஜந்தகுமாரின் கட்டுரையையும் இந்த இதழில் வந்திருக்கிறது. ரமேஷின் கட்டரை முருகையன் பற்றிய முழுமையான தகவல்களுடன் அவரது இடத்தை நிறுவுகிறது. அஜந்தகுமாரின் கட்டுரை முருகையனின் கவிதைகளை முற்போக்கு, பொதுவுடமை, விடுதலை போன்ற சமூக எழுச்சித் தளங்களை சுருக்கமாக குறிப்படுகிறது.

நடுகை இதழின் இந்த மீள் வருகையும் மகிழ்ச்சி தருகிறது. குறிப்பாக கவிதை- சொற்களுக்கு அது முக்கியத்துவம் கொடுப்பதுடன் எல்லாக் குரல்களையும் இணைத்துத் தருகிறது. எளிமையான வடிவமைப்புடன் 5 ரூபா விலையில் சொற்களை சனங்களிடம் கொண்டு போகிறது.

- தீபச்செல்வன்

No comments: